நைஜீரியாவில் தீவிரவாதிகளால்100 பள்ளி மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவில் தீவிரவாதிகளால்100 பள்ளி மாணவிகள் கடத்தல்
Updated on
1 min read

நைஜீரியாவில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட நிலையில், மீண்டும் பள்ளி மாணவிகள் 100 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 100 மாணவிகளை துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்று 40 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களைக் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவிகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது.

போகோ ஹராம்

2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.

போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in