

இஸ்ரேல் மக்கள் தொலையில் பாதி சதவீதம் பேருக்கு மேல் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை தரப்பில், “ நாட்டில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டது. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் பாதியினருக்கு மேல் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹலோசேட்டர் கரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளது. கரோனாவால் ஆபத்தான கட்டத்தில் இருந்த 20% நோயாளிகளுக்கு இந்த கரோனா தடுப்பு மருந்து பயன்பட்டது. இதில் 90% பேர் குணமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் கடந்த வாரம் தெரிவித்தது.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மாடர்னா, பைசர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.