Published : 26 Feb 2021 01:11 PM
Last Updated : 26 Feb 2021 01:11 PM

கனடாவில் இந்தியர்களுக்கு மிரட்டல்; காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது புகார்; பாதுகாப்புக் கோரி ஆர்ப்பாட்டம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தக் கோரி காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக டெரோன்டோ நகரில் வசிக்கும் சீக்கியர்கள் அல்லாத மற்ற இந்தியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர்களை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரை 11 சுற்றுப்பேச்சு நடத்தியும் எந்த உறுதியான முடிவும் இல்லை. கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. டெல்லி செங்கோட்டையில் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் அமைப்பின் கொடியை ஏற்றினர். இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் ஊடுருவியிருப்பதாக டெல்லி காவல் துறை ஏற்கெனவே தெரிவித்தது. மேலும், பாகிஸ்தான் ஆதரவுடன் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கனடாவில் செயல்பட்டு வரும் ‘பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன்’ இயக்கத்தின் நிறுவனர் மோ தாலிவால் என்பவர் பேசிய வீடியோ வைரலானது. இந்திய குடியரசு தினத்தன்று கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியே, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக சில சீக்கிய அமைப்புகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின. அதற்கு தலைமை வகித்து மோ தாலிவால் பேசியுள்ளார்.

அவரது பேச்சில் ‘‘இந்தப் போராட்டம்தான் நமது யுத்தத்தின் ஆரம்பம். வேளாண் சட்டங்கள் நீக்கப்பட்டால் இந்தப் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என யாரேனும் கூறினால் அதனை ஏற்காதீர்கள். நீங்கள் காலிஸ்தான் இயக்கத்தில் இல்லாதவர் எனக் கூறுகிறார்கள்.’’ எனக் கூறினார்.

இந்தநிலையில் கனடாவின் டொரோன்டோ நகரில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மற்ற இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி. ஜக்மித் சிங் ஆதரவளிப்பதாக கூறி டொரோன்டோ நகரில் வசிக்கும் சீக்கியர்கள் அல்லாத மற்ற இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:
‘‘நாங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் காலிஸ்தான் ஆதரவு போராட்டமாகி விட்டது. தற்போது அவர்கள் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை தாக்குகிறார்கள்.

ஆனால் நாங்கள் வாக்களித்து தேர்வு செய்ய அரசியல்வாதிகள் எங்களை பாதுகாக்க தவறி விட்டார்கள். காலிஸ்தான் ஆதரவாளர்களை பாதுகாக்கிறார்கள்.’’ எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x