Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM

12 பேருக்கு சர்வதேச ஊழல் தடுப்பு விருது இந்திய சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தேர்வு: ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு

ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் 12 பேருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அரசு செயலர் டோனி பிளிங்கென் கூறியதாவது, “சர்வதேச அளவில் ஊழல் நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டுமெனில் இது தொடர்பான விவகாரங்களில் தீவிரமாக இயங்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

அதன்படி துணிச்சலுடன் ஊழல் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை அங்கீகரிக்கும் விதிமாக புதிய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது வழங்க திட்டமிட்டுள்ளது” என்றார்.

அரசு நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல், ஊழலுக்கு எதிரான முயற்சிகளைத் தீவிரமாக முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றில் இயங்கும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 தனிநபர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் பட்டியலில் இந்திய சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜும் இடம்பெற்றுள்ளார்.

48 வயதாகும் அஞ்சலி பரத்வாஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திவரும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்துவருகிறார். சதர்க் நக்ரிக் சங்கதன் என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும் கடமையையும் உறுதி செய்யும் முயற்சிகளை எடுத்துவருகிறார். மேலும் இதில் கணிசமான மக்களையும் ஆர்வமுடன் பங்கெடுக்க வைக்கிறார்.

மக்களின் தகவல் அறியும் உரிமையின் தேசிய அளவிலான விழிப்புணர்வையும் ஒருங்கிணைந்துவருகிறார். மேலும் ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அம்பலப்படுத்தும் நபர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தையும், ஊழல் விவகாரங்களின் குறைதீர்ப்பு அமைப்பையும் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

இந்த விருது குறித்து அஞ்சலி பரத்வாஜ் கூறுகையில், பலரின் கூட்டு ஒத்துழைப்பில்தான் அனைத்துவிதமான ஊழல் தடுப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த விருது எங்களுக்குத் தொடர்ந்து செயல்படும் உற்சாகத்தை அளிக்கிறது என்றார்.

ஊழலுக்கு எதிராக இயங்கும் தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவற்றின் உதவியனால்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான பொது சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க அரசு செயலர் டோனி பிளிங்கென் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x