Published : 21 Feb 2021 12:59 PM
Last Updated : 21 Feb 2021 12:59 PM

மியான்மர் போராட்டம்: ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி; பலர் காயம்

மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போரட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நாளும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மியான்மரில் மாண்டலேவில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலில், 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

மியான்மர் ராணுவத்தின் இத்தாக்குதலை ஐ. நா.,பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

முன்னதாக மியான்மரில் கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துக்கு எதிராக நடத்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் 20 வயதான ஆங் சான் சூ தலையில் குண்டு பாய்தலால் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும். இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.

என்ன நடக்கிறது மியன்மரில்?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x