

கரோனா தடுப்பு மருந்தைப் போட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ஜகர்த்தா ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஜகர்த்தா ஆளுநர் அகமத் ரிசா கூறும்போது, ''ஜகர்த்தா குடியிருப்பாளர்கள் கரோனா தடுப்பு மருந்தைப் போட மறுத்தால் 356.89 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது. இந்நிலையில், பைசர் கரோனா தடுப்பு மருந்து மற்றும் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தோனேசியா செலுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.