

மியான்மரில் தொடர்ந்து ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப் பெற்று வருகின்றன.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. யாங்கூனில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலரும் ஒன்றுகூடி பெரிய அளவிலான பேரணிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீப நாட்களாக மியான்மர் போராட்டத்தில் புத்த துறவிகள் கலந்து கொண்டு வருகின்றனர். மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சியை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர். புத்த துறவிகளுக்கு ராணுவ ஆட்சி தேவையில்லை என்ற பதாகைகளையும் அவர்கள் தாங்கி பிடித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.
என்ன நடக்கிறது மியன்மரில்?
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது