Published : 17 Feb 2021 07:34 PM
Last Updated : 17 Feb 2021 07:34 PM
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, 40 மாணவர்களைக் கடத்திச் சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நைஜீரிய அரசின் செய்தித் தொடர்பாளர் முகமத் சனி கூறும்போது, “நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்று 40 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களைக் கடத்திச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நைகரிலும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது.
போகோ ஹராம்
2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.
போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT