Published : 17 Feb 2021 11:09 AM
Last Updated : 17 Feb 2021 11:09 AM

போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளை மியான்மர் சந்திக்கும்: ஐ.நா. எச்சரிக்கை

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளை மியான்மர் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, “மியான்மரில் அமைதியாகப் போராடுபவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடுக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யனக்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x