Published : 13 Feb 2021 11:35 AM
Last Updated : 13 Feb 2021 11:35 AM

ஐரோப்பிய யூனியனுடனான உறவை முறித்துக் கொள்ளத் தயார்: ரஷ்யா

ஐரோப்பிய யூனியன் எங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தால் உறவைத் துண்டித்துக் கொள்ளக் தயாராக இருக்கிறோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் கைது காரணமாக ஐரோப்பிய யூனியனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் ரஷ்யா தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்றால்
அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “நாங்கள் தனித்திருக்க விரும்பவில்லை. ஆனால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். அமைதி வேண்டும் என்றால், நீங்கள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும். நிலவும் சூழலிலிருந்து நாங்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து உறவை முறித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸி நவால்னி கைது

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது

இந்த நிலையில் ரஷ்யா திரும்பிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x