Published : 12 Feb 2021 07:10 PM
Last Updated : 12 Feb 2021 07:10 PM

மியான்மர் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடை மக்களைப் பாதிக்கக் கூடாது: ஐ.நா. எச்சரிக்கை

மியான்மர் மீது விதிக்கப்படும் எந்த ஒரு பொருளாதாரத் தடையும், பொதுமக்களைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா இந்த வாரம் பொருளாதாரத் தடை விதித்தது. தொடர்ந்து பிற நாடுகளும் மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “மியான்மர் மீது விதிக்கப்படும் எந்த ஒரு தடையும் தனிப்பட்ட நபர் சார்ந்து இருக்க வேண்டும். இந்தப் பொருளாதாரத் தடைகள் பொதுமக்களைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உலக நாடுகள் இதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மியான்மர் ராணுவத் தளபதி மின் ஹங்குக்கு ஆதரவாக செயல்படும் சீனாவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டனர்.

நடந்தது என்ன?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x