

சவுதியின் அபா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சவுதியின் கிங் காலித் விமான நிலையத்தில் நாங்கள்தான் துல்லியத் தாக்குதல் நடத்தினோம். எங்களது படைதான் இந்தத் தாக்குதலை நடத்தியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபா பயணிகள் விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கிங் காலித் விமான நிலையத்தில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முன்னதாக, ஏமன் போரில் சவுதிக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
ஏமன் போர்
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.