

மியான்மர் ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும் சீனாவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மியான்மர் ராணுவ தளபதி மின் ஹங்குக்கு ஆதரவாக செயல்படும் சீனாவுக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறும்போது, “ சீனாதான் உண்மையான குற்றவாளி. அவர்கள் அமைதியான நாட்டில் கலவரத்தைத் தூண்டி இருக்கிறார்கள். ஜனநாயகத்தை பணயம் வைக்க சீன ராணுவத்தை கட்டாயப்படுத்தியுள்ளனர். ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சீன தூதரகத்தின் முன்பாகவும் மியான்மர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
நடந்தது என்ன?
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.