Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM
கரீபியன் தீவான ஹிஸ்பனியோலாவில் அமைந்துள்ளது டொமினிக்குடியரசு நாடு. இது ஒரு இலத்தீன் அமெரிக்க நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகையே 72 ஆயிரம் பேர்தான். இந்நாட்டின் பிரதமராக ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் பதவி வகிக்கிறார். தற்போது கரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியா பல நாடுகளுக்கு இலவசமாகவும் வர்த்தக ரீதியாகவும் அனுப்பி வருகிறது.
அதன்படி, தங்கள் நாட்டு மக்களுக்கும் தடுப்பூசி அனுப்பி வைக்கவேண்டும் என்று இந்திய பிரதமர்மோடிக்கு, டொமினிக் பிரதமர் ரூஸ்வெல்ட் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, முதல் கட்டமாக 35 ஆயிரம் தடுப்பூசி குப்பிகளை டொமினிக் குடியரசு நாட்டுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.
இதுகுறித்து பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் நேற்று கூறியதாவது:
எங்கள் நாட்டின் மக்கள் தொகையே 72 ஆயிரம் பேர்தான். தடுப்பூசி வேண்டும் என்று ஜனவரி 19-ம் தேதி கோரிக்கை வைத்தோம். ஆனால், இவ்வளவு விரைவில் அதற்கு சாதகமாக பிரதமர்மோடி நடவடிக்கை எடுப்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால், எங்கள் பிரார்த்தனைக்கு பதில் கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. ஆனால்,எங்கள் நாட்டின் அளவு, மக்கள் தொகையைப் பார்க்கும் போது, உடனடியாக எங்களுக்கு முன்னுரிமை அளிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், எங்கள் பிரார்த்தனைக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.
இவ்வாறு டொமினிக் பிரதமர் ரூஸ்வெல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT