Published : 11 Nov 2015 11:18 AM
Last Updated : 11 Nov 2015 11:18 AM

மோடி - ஒபாமா புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முதல் முறையாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசித்ததாக அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் பருவநிலையை சமாளிப்பது தொடர்பாக இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், பொருளாதார, பாதுகாப்பு துறைகளில் ஏற்பட்டுள்ள உடன்பாடு ஆகியன குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சற்று முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். புதிய ஹாட்லைனில் இதுதான் எங்கள் முதல் உரையாடல். நாங்கள் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் நாங்கள் சந்திக்கவுள்ளோம். வேறு சில விவகாரங்கள் குறித்து பேசினோம். வெள்ளை மாளிகை தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிபிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x