Published : 02 Feb 2021 01:22 PM
Last Updated : 02 Feb 2021 01:22 PM

அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த விருப்பம்: ஈரான்

ஈரான் அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீஃப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீஃப் கூறும்போது, “தோல்வியுற்ற ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்பவில்லை. அதனால் அமெரிக்காவுக்கு வாய்ப்பு உள்ளது. நாங்கள் அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்” என்றார்.

சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார் என்றும், ஈரானுடனான எங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம் என்றும் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்தது.

நடந்தது என்ன?

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.

மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x