Published : 29 Jan 2021 07:10 AM
Last Updated : 29 Jan 2021 07:10 AM

இந்தியா வழங்கிய கரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க தொடங்கியது நேபாளம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தை, இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த தடுப்பு மருந்து இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை,
பூடான் போன்ற நாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு தடுப்பு மருந்தை இந்திய அரசு இலவசமாக அனுப்பி வருகிறது.

இந்நிலையில், நேபாளத்துக்கு கடந்த வாரம் 10 லட்சம் தடுப்பு மருந்துகளை இந்திய அரசு அனுப்பி வைத்தது. அதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒளி நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த தடுப்பு மருந்துகளை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணியை, பிரதமர் சர்மா ஒளி கடந்த புதன்கிழமை தொடங்கி வைத்தார். அதேநேரத்தில் நேபாளத்தில் உள்ள மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கும் பணி தொடங்கினர்.

இதுகுறித்து பிரதமர் சர்மா ஒளி கூறும்போது, ‘‘மூன்று மாதங்களுக்குள் அனைத்து நேபாளிகளுக்கும் இலவசமாக கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

நேபாளத்தில் முதல் கட்டமாக 4 லட்சத்து 30 ஆயிரம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது.

நேபாளத்தைப் போலவே இலங்கைக்கு 5 லட்சம் கோவிஷீல்டு இலவச தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தது. ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் சென்ற தடுப்பு மருந்துகளை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x