Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடத்தை அந்நாட்டு ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர். அவற்றை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொன்ட்டியநாக் நகருக்கு  விஜயா ஏர் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டது. அதில் விமானக் குழுவினர் உட்பட 62 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட 4-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையின் ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் திடீரென மறைந்தது.

இதனைத் தொடர்ந்து, விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. குறிப்பாக, ஜாவா கடற்பகுதியில் கப்பல்கள் மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் மாயமான விமானத்தை தேடும் பணியில் ராணுவத்தினர் இரவு பகலாக ஈடுபட்டனர். நேற்று அதிகாலை அந்த விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. எனினும், கடலுக்கு அடியில் பல நூறு அடிக்கு கீழே அவை இருப்பதால் அவற்றை உடனடியாக மீட்க முடியவில்லை.

கருப்புப் பெட்டிகளை மீட்கும் பணிகளில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 48 மணிநேரத்துக்குள் அவை மீட்கப்பட்டு விடும் என இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தலைவர் சோர்ஜன்டோ ஜாஜோனா கூறினார். இதனிடையே, ஜாவா தீவுகளுக்கு அருகே கிடைத்த சில உதிரி பாகங்கள் விமானத்தின் பாகங்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

விமான விபத்துக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x