உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால் பதவி நீக்க நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப்புக்கு சபாநாயகர் எச்சரிக்கை

உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால் பதவி நீக்க நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப்புக்கு சபாநாயகர் எச்சரிக்கை
Updated on
1 min read

நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் தனது ஆதரவாளர்கள் அத்துமீறலில் ஈடுபட அனுமதித்த, அதிபர் ட்ரம்ப் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் அவை சபாநாயகர் நான்சி பெலோசி உறுதியாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடந்த 6-ம் தேதி எலக்ட்டோரல் காலேஜ் முடிவுகளை அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அன்றைய தினம் கூடின. அப்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்ற அவைகளுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி நேற்றுமுன்தினம் கூறியதாவது:

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த தனது ஆதரவாளர்களை தடுக்க ட்ரம்ப் தவறிவிட்டார். அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ட்ரம்ப் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவர் ராஜினாமா செய்யாவிட்டால், 25-வது சட்டத் திருத்தத்தின்படி ட்ரம்ப் மீது கண்டன தீர்மானம் அல்லது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு நான்சி பெலோசி கூறினார்.

சபாநாயகரின் கருத்தை ஜனநாயகக் கட்சியினர் வரவேற்றுள்ளனர். ட்ரம்ப்பை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தஎம்.பி. பிரமிளா ஜெயபால் கூறும்போது, ‘‘ட்ரம்ப் மீது உடனடியாக கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும்’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in