Published : 08 Jan 2021 07:58 PM
Last Updated : 08 Jan 2021 07:58 PM

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதல்; ஜனநாயகத்துக்கு அவமானம்: எர்டோகன்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான அவமானம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், ட்ரம்ப் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பல்வேறு உலகத் தலைவர்களும் அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

துருக்கி அதிபர் எர்டோகன், ட்ரம்ப்புடன் நெருங்கிய நட்பில் இருந்த உலகத் தலைவர்களில் ஒருவர். அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கு 3 நாட்கள் கழித்தே எர்டோகன் வாழ்த்து கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை எர்டோகன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எர்டோகன் கூறும்போது, “இது ஜனநாயகம் மீதான அவமானம். ஜோ பைடன் பதவி ஏற்கும் ஜனவரி 20ஆம் தேதி முதல் அமெரிக்காவில் அமைதி நிலவும் என்று நம்புவோம். விரைவில் அமெரிக்காவில் அமைதி திரும்பும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x