அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகை: அதிபர் ட்ரம்ப் அரசின் கல்வி, போக்குவரத்து துறை அமைச்சர்கள் ராஜினாமா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்
Updated on
2 min read

அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் முற்றுகைப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் அரசின் கல்வித்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற பொறுப்பு போலீஸ் அதிகாரியும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மூலம் தாக்கியதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அதிபர் ட்ரம்ப் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் எலானி சாவோ, கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பெஸ்டி தேவாஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

போக்குவரத்து துறை அமைச்சர்  சாவோ, கல்வித்துறை அமைச்சர் பெஸ்டி தேவாஸ்
போக்குவரத்து துறை அமைச்சர் சாவோ, கல்வித்துறை அமைச்சர் பெஸ்டி தேவாஸ்

அதிபர் ட்ரம்ப்புக்கு கல்வித்துறை அமைச்சர் தேவாஸ் எழுதிய கடிதத்தில் “ நாடாளுமன்றத்தை நோக்கி உங்கள்ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம், கலவரம் என்னை மிகவும் வேதனையடைச் செய்துள்ளது.

அமெரிக்க மக்கள் சார்பாக உங்கள் நிர்வாகத்தின் பலசாதனைகளைக் கொண்டாட வேண்டும். ஆனால், அதற்குபதிலாக அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் செய்த வன்முறை மிகவும் வேதனைப்படுத்துகிறது. போராட்டக்காரர்கள் நடந்து கொண்ட முறை நாட்டும மக்களால் சகித்துக்கொள்ள முடியாது.

இந்த சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் மனதில் இது ஆழமாகப் பதிந்திருக்கும், அவர்கள் நம்மைப்பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதேபோல போக்குவரத்து துறை அமைச்சர் சாவோவும தனது ராஜினாமா கடித்ததை அதிபர் ட்ரம்ப்புக்கு அனுப்பியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் பலரும் வன்முறைப் போராட்டத்தால் அதிருப்தி அடைந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மாட் பொட்டிங்கர், மெலானியா ட்ரம்ப்பின் உதவி அதிகாரி ஸ்டெபானி கிரிஷாம், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு அமைச்சர் சாரா மாத்யூஸ், வெள்ளை மாளிகை சமூகப்பிரிவு அமைச்சர் ரிக்கி நிசிடா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in