Published : 07 Jan 2021 05:56 PM
Last Updated : 07 Jan 2021 05:56 PM

ட்ரம்ப் நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்: ஈரான் அதிபர்

ட்ரம்ப் நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நாம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று கண்டது மேற்கத்திய ஜனநாயகம் எவ்வளவு பலவீனமானது மற்றும் பாதிக்கப்படக்கூடியது என்பதைக் காட்டுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ட்ரம்ப் நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அடுத்து வெள்ளை மாளிக்கைக்கு வருபவர் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். புதிதாக வருபவர்கள் அமெரிக்காவை மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில் அமெரிக்கா சிறந்த தேசமாகும்” என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x