Published : 07 Jan 2021 01:01 PM
Last Updated : 07 Jan 2021 01:01 PM

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல்: உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும், இதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

இந்த வன்முறைக்கு உலகத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

ஜனநாயகம் என்பது வாக்களிக்கும் நபர்களின் உரிமை. அவர்களின் குரலைக் கேட்டு, பின்னர் அந்த முடிவை அமைதியாக நிலைநிறுத்துவது. அது கும்பலால் செய்யப்படுவது அல்ல.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

வாஷிங்டனில் நடைபெற்ற கலவரங்கள் கவலை அளிக்கின்றன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது அவமரியாதையான காட்சிகள். அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தைக் குறிக்கிறது. இப்போது அங்கு அமைதியான மற்றும் ஒழுங்கான அதிகாரப் பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம்.

ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹைகோ மாஸ்

ட்ரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் இறுதியாக அமெரிக்க வாக்காளர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு ஜனநாயகத்தை மிதிப்பதை நிறுத்த வேண்டும்.

இந்தியப் பிரதமர் மோடி

வாஷிங்டன் டிசியில் நடக்கும் வன்முறையையும், கலவரத்தையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் அதிகாரம் அமைதியான முறையில் மாற்றம் செய்யப்பட்டு தொடர வேண்டும். சட்டவிரோதப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலம் ஜனநாயகச் செயல்முறையைத் தகர்ப்பதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு உலக நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x