Published : 05 Jan 2021 08:15 PM
Last Updated : 05 Jan 2021 08:15 PM

ஈரானில் முதல் முறையாக ஒருவருக்கு உருமாறிய கரோனா தொற்று

ஈரானில் முதல் முறையாக உருமாறிய கரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சர் சயீத் நமாகி கூறும்போது, “பிரிட்டனிலிருந்து பரவும் உருமாறிய கரோனா தொற்று ஈரானில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நபர் பிரிட்டனிலிருந்து வருகை புரிந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கண்காணிப்பில் உள்ளார். அவர் தொடர்புகொண்ட நபர்களைக் கண்டறியும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு கடந்த வாரம் தொடங்கியது.

ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் கரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x