Published : 04 Jan 2021 09:07 PM
Last Updated : 04 Jan 2021 09:07 PM

சிரியாவில் தீவிரவாதத் தாக்குதல்: 15 பேர் பலி

சிரியாவில் அரசு படையினர் சென்ற பேருந்தில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரியா போர் கண்காணிப்பு குழு கூறும்போது, “ சிரியாவின் மத்திய பகுதிகளில் அரசுப் படை வீரர்கள் பேருந்தில் செல்லும்போது துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்களில் 3 பேர் பொது மக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த வாரமும் சிரியாவின் இஸ்சர் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலியாகி உள்ளனர்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x