Published : 31 Dec 2020 07:32 PM
Last Updated : 31 Dec 2020 07:32 PM

ஏடன் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 25 பேர் பலி; 110 பேர் காயம்

ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் அல் அரேபியான் ஊடகங்கள் தரப்பில், “ஏமனின் ஏடன் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவைக் குழு வந்திறங்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் பொதுமக்கள் 25 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.

ஏமனில் நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x