Published : 31 Dec 2020 05:22 PM
Last Updated : 31 Dec 2020 05:22 PM

இஸ்ரேலில் 8 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது: நெதன்யாகு

இஸ்ரேலில் இதுவரை 8 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “நேற்று மட்டும் 1,50,000 இஸ்ரேலியர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதுவரை 8 லட்சம் மக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து இதனைச் செயல்படுத்துவோம். விரைவில் கரோனா தொற்று நோயை அகற்றுவோம். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்” என்று நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேலில் இம்மாதத் தொடக்கத்தில் கரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு விதிக்கப்பட்டது. அங்கு இதுவரை 4,19,312 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,253 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

பிரிட்டனின் பைஸர் கரோனா தடுப்பு மருந்துகள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் நவம்பர் மாதம் இஸ்ரேல் வந்தடைந்தன. மேலும், அமெரிக்காவின் மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x