Published : 30 Dec 2020 06:10 PM
Last Updated : 30 Dec 2020 06:10 PM

சீனாவில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று

சீனாவில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ நாட்டில் கடந்த சில நாட்களாக இரட்டை இலக்க எண்களில் கரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் வடக்கு கிழக்கு மாகாணமான லியானிங்கில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள். மீதம் 7 பேருக்கு உள்ளூரில் தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன. சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91% பயனளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x