Published : 29 Dec 2020 04:02 PM
Last Updated : 29 Dec 2020 04:02 PM

இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈரானின் கரோனா தடுப்பு மருந்து

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ ஷிபாபார்மெட் மருந்து நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள உள்நாட்டு கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. 6 மாத கால பரிசோதனையில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து பல நிலைகளை கடந்து வெற்றி பெற்று தற்போது இறுதிக்கட்ட சோதனையை அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முதலில் நமது குடும்பத்தினரை தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சயித் நமாகி தெரிவித்துள்ளார்.

ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில், முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x