Published : 26 Dec 2020 07:55 PM
Last Updated : 26 Dec 2020 07:55 PM

சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி ட்ரம்ப்புக்கும் நேரலாம்: ஈரான் அதிபர்

இராக் அதிபர் சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நேரலாம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அரசுத் தொலைக்காட்சியில் கூறும்போது, “ எங்களது சமீபத்திய வரலாற்றில் நாங்கள் இருவிதமான மோசமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறோம். ஒருவர் ட்ரம்ப், மற்றொருவர் சதாம்.

சதாம் எங்களுடன் போரில் ஈடுபட்டார். ட்ரம்ப் எங்களுடன் பொருளாதாரப் போரில் ஈடுபட்டார். இரண்டிலும் ஈரான் வெற்றி பெற்றுவிட்டது. சதாம் அவரது குற்றத்திற்குத் தண்டனை பெற்றுவிட்டார். ட்ரம்ப்பின் விதியும் சிறப்பாக இருக்கப் போவதில்லை. சதாமுக்கு நேர்ந்த கதி ட்ரம்ப்புக்கும் நேரலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இராக்கில் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறார் என்றும், ஷியா முஸ்லிம்களைக் கொல்கிறார் என்றும் 2003ஆம் ஆண்டு சதாமின் ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்தது. இதனைத் தொடர்ந்து சதாம் தலைமறைவானார். அமெரிக்கப் படையால் இறுதியில் பிடிக்கப்பட்ட சதாம் உசேன், 2006ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாகப் பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.

மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொன்றார். இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் என்றும், அமெரிக்கா தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x