Published : 26 Dec 2020 04:15 PM
Last Updated : 26 Dec 2020 04:15 PM

60 வயதை கடந்தவர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பு மருந்து வழங்க ரஷ்யா அனுமதி

ரஷ்யாவில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே 30 ஆயிரம் எண்ணிக்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு கரோனா பாதிப்பு 30 லட்சத்தை கடந்தது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின்.

ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

மேலும் உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸுக்கு ஸ்புட்னிக் தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிப்பதாக ரஷ்யா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணி விரைவாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 60 வயதை கடந்தவர்களுக்கும் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து அளிக்கலாம் என்று ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x