பிரான்ஸ் அதிபருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை

பிரான்ஸ் அதிபருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை
Updated on
1 min read

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்குக் கரோனா அறிகுறிகளான இருமல், உடல் வலி ஆகியவை இருந்தன. இதனைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முதல் மக்ரோன் ஆரோக்கியமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் அலுவலகம் கூறும்போது, ''அதிபர் மக்ரோனின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்துவிட்டது. அவருக்கு எந்தவிதமான கரோனா தொற்றும், அதற்கான அறிகுறிகளும் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in