Published : 22 Dec 2020 12:13 PM
Last Updated : 22 Dec 2020 12:13 PM

உருமாறிய கரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி செல்லவில்லை; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்

உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு இயக்குநர் மருத்துவர் மைக்கேல் ரேயான் : கோப்புப்படம்

ஜெனிவா


பிரிட்டன், தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் நமது கட்டுப்பாட்டை மீறி எல்லாம் இல்லை, அதைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் இருக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு ஞாயிறு முதல் விதித்துள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸில் உருமாறியுள்ள கரோனா வைரஸ் பரவும் வேகம் 70 சதவீதம் அதிகமானது, கட்டுப்பாட்டில் இல்லை என்று பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவின் தலைவர் மருத்துவர் மைக்கேல் ரேயான் நேற்று ஜெனிவாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ உலகின் பல நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை. உருமாறிய கரோனா வைரைஸக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.

நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்தால் போதுமானது. ஆனால், இன்னும் சற்று தீவிரத்தன்மையுடனும், நீண்டகாலத்துக்கும் செய்வது வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், சில நாடுகளில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து தீவிரமான நடவடிக்கைகள், கடினமான கட்டுப்பாடுகள் தேவை. அப்போதுதான் உருமாறிய கரோனா வைரஸ் சற்று வீரியத்தன்மை உள்ளதாக இருந்தாலும் அதை நம்மால் தடுத்துநிறுத்த முடியும்”.

இவ்வாறு மைக்கேல் ரேயான் தெரிவித்தார்.

மருத்துவர் மரியா வான் கெராகோவ்

உலக சுகதாார அமைப்பின் தொற்றுநோய் பிரிவின் மருத்துவர் மரியா வான் கெராகோவ் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில் “ உருமாறிய கரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் வேகம் என்பது 1.1 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உருமாறிய கரோனா வைரஸால் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் எந்த தாக்கத்தையும் செலுத்த முடியாது. புதிய கரோனா தடுப்பு மருந்துகள் செயலிழந்துவிடுவோமோ என எதிர்பார்க்க வேண்டாம்.

எங்களைப் பொருத்தவரை பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதேத் தவிர, அதன் தாக்கம், பாதிப்பு பெரிதாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தெரியவில்லை. மனிதர்களின் உடம்பில் அந்த வைரஸுக்கான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாக்குவதற்கான திறன் இருக்கிறதா என பார்த்து வருகிறோம், ஆய்வு செய்து வருகிறோம்.

உருமாறிய கரோனா வைரஸ் பரவல் குறித்து தற்போதுதான் ஆய்வு செய்து வருகிறோம். இந்த வைரஸையும் நாம் கட்டுப்படுத்த வழக்கமான முறையான சுமூக விலகலைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்தாலே போதுமானது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x