Published : 21 Dec 2020 07:19 PM
Last Updated : 21 Dec 2020 07:19 PM
பிரிட்டனின் தென் கிழக்குப் பகுதிகளில் புதிய வகை கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கான விமானச் சேவையைத் தடை செய்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், புதிய வகை கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தத் தளர்வுகளை ரத்து செய்துள்ளது.
இதற்கு முன்புவரை 3-வது படிநிலைக் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் 4-வது படிநிலை ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
புதியவகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனுக்கான விமானச் சேவையைப் பல நாடுகள் தடை செய்துள்ளன.
அவற்றின் விவரம்:
அர்ஜென்டினா: பிரிட்டனிலிருந்து விமானங்கள் இன்று முதல் தடை செய்யப்படுகின்றன.
பல்கேரியா: ஜனவரி 31ஆம் தேதிவரை பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
கனடா: அடுத்த 72 மணி நேரத்திற்கு பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்படுகின்றன.
சிலி: செவ்வாய்க்கிழமை முதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்படுகின்றன.
கொலம்பியா: பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமானங்களும் தடை செய்யப்படுகின்றன.
குரேஷியா: 48 மணி நேரத்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் தற்காலிகமாகத் தடை செய்யப்படுகின்றன.
எல் சால்வேடார்: பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிகாவிலிருந்து வரும் நபர்கள் அடுத்த 30 நாளைக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பின்லாந்து: இரு வாரங்களுக்கு பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்படுகின்றன.
பிரான்ஸ் : அடுத்த 48 மணி நேரத்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை, வர்த்தகப் பொருட்களும் இதில் அடங்கும்.
ஜெர்மனி: டிசம்பர் 31ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை.
இத்தாலி, ஈரான், இந்தியா, எஸ்டோனியா, லாட்வியா, அயர்லாந்து, துருக்கி, இஸ்ரேல், ஜோர்டான், குவைத், மொராக்கோ, ஸ்விட்சர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளும் பிரிட்டனுக்கான விமானச் சேவைக்குத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT