

நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி மீது வைர மோசடி தொடர்பாக நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம்கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ்மோடி, தற்போது லண்டன் சிறையில் உள்ளார். அவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இன்டர்போல் நோட்டீஸ்
நீரவ் மோடியின் தம்பி நேஹல் மோடியும் அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் உள்ள பெரிய வைர நிறுவனம்ஒன்றிடம் இருந்துதவறான தகவல்களைக் கொடுத்து2.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக ஏற்கெனவே இன்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் நேஹல் மோடிக்கு எதிராக வைரங்கள் மோசடி செய்தது குறித்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
2015-ம் ஆண்டு மார்ச் முதல்ஆகஸ்ட் வரை எல்எல்டி வைரங்கள் என்ற நிறுவனத்திடம் இருந்து வைரங்களை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நேஹல் மோடி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. எனினும், நேஹல்மோடி மோசடியில் ஈடுபடவில்லை, வர்த்தகத்தில் ஏற்பட்ட பிழை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.