Published : 19 Dec 2020 08:21 PM
Last Updated : 19 Dec 2020 08:21 PM

கரோனா தடுப்பு மருந்து: ஜோ பைடன் திங்கட்கிழமை பெறுகிறார்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கரோனா தடுப்பு மருந்தை திங்கட்கிழமை பெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் திங்கட்கிழமை பைசர் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வந்துள்ள சூழலில், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகத் தலைவர்கள் அனைவரும் முன்வந்து கரோனா தடுப்பு மருந்துகளைப் போட்டுக் கொள்கின்றனர்.

முன்னதாக, ஜோ பைடன் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர்தான் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. மேலும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் நேற்று கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x