Published : 26 Jun 2014 01:36 PM
Last Updated : 26 Jun 2014 01:36 PM
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய குடும்பத்தினர் மீது இனவெறி காரணமாக எச்சிலை உமிழ்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய வகை உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் ஒன்றை ராஜ் ஷர்மா நடத்தி வருகிறார். இந்த நிலையில், குவின்ஸ்லாந்தில் உள்ள தனது உணவகத்தின் வெளியே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே நடந்து சென்ற மூன்று இளைஞர்கள், ராஜ் ஷர்மாவின் உணவகத்தில் பணிபுரியும் ஒருவர் மற்றும் வழி பாதையில் சென்றவர்கள் ஆகியோரிடம் அநாகரீகமாக பேசியுள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் அங்கு அடிக்கடி நடைபெறுவதால், தனது குடும்பத்தினரை அழைத்து ஷர்மா, உணவகத்தின் உள்ளே சென்றுள்ளார். அப்போது உணவகத்தின் உள்ளே நுழைந்த இளைஞர்கள், ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினரை இழிவாக பேசியதோடு ஷர்மா குடும்பத்தினர் மீது எச்சிலை உமிழ்ந்துள்ளார்.
இனவெறியை வெளிப்படுத்தும் விதமாக நடந்த இந்த சம்பவம் குறித்து இப்ஸ்விச் நகர பாதுகாப்பு கவுன்சிலில் ஷர்மா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த பாதுகாப்புத் துறையினர், மூன்று இளைஞர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இவர்களில் இருவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், மோசமாக நடந்துக்கொண்ட ஒருவரை கைது செய்ய நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டது. மீண்டும் அவரை ஜூலை 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டது.
இந்திய வம்சாவளியினர்கள் மீது ஆஸ்திரேலியாவில் நிகழும் இனவெறி மோதல்கள் அதிகரித்து வருவதாகவும். பொதுவாக இரவுகளில் நடக்கும் சம்பவங்கள் சமீப காலமாக பட்டப்பகலிலும் நடக்க ஆரம்பித்துவிட்டதாக நீதிமன்றத்தில் ஷர்மா குறிப்பிட்டு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT