

ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழையும் முயற்சியில் கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி வந்த அகதிகள் படகு கடலில் மூழ்கி 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் 13 பேர் குழந்தைகள்.
ஆனால், 144 பேர் காப்பாற்றப் பட்டதாக கிரீஸ் நாட்டு துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையான இன்று காலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கின. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும்.
துருக்கியிலிருந்து படகில் காலிம்னோஸ் தீவுக்கு இந்த அகதிகள் வந்துள்ளனர். இதே போல் ரோட்ஸ் அருகே கடலில் மேலுமொரு படகு கவிழ்ந்து சிலர் பலியாகியுள்ளனர்.
துருக்கியிலிருந்து கிரீஸுக்கு வரும் முயற்சியில் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 68 அகதிகள் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் ஐ.எஸ். ஆக்ரமிப்பு பகுதியில் அரசப் படைகளின் கடும் தாக்குதல்களை அடுத்து ஆயிரக்கணக்கில் அங்கிருந்து மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதில் பலரும் நடுக்கடலில் மூழ்கி பலியாவது ஒரு வாடிக்கையான துயரமாகவே மாறிவிட்டது.
கிரீஸின் லெஸ்பாஸில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் அகதிகள் நுழைந்துள்ளனர். இதில் சுமார் 1 லட்சம் பேர் அக்டோபரில் மட்டும் வந்துள்ளனர். கடற்காற்றை தாங்காத சிறிய மரப்படகில் இவர்கள் வருகின்றனர், இதனால் படகுகள் முறிந்து கடலில் மூழ்கி பலியாகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.