Published : 09 Dec 2020 06:33 PM
Last Updated : 09 Dec 2020 06:33 PM

ஜெர்மனியில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க அதிபர் ஆலோசனை

ஜெர்மனியில் கரோனா பலி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜெர்மன் ஊடகங்கள் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகக் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 18,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 622 பேர் பலியாகி உள்ளனர். இன்று இப்போதுவரை 2,190 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் பலியாகி உள்ளனர்.

கரோனா பலி சில நாட்களாக அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர ஜெர்மனி அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x