Published : 06 Dec 2020 12:52 PM
Last Updated : 06 Dec 2020 12:52 PM
கரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் இதன் மூலம் மோசமான வறுமையில் வீழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுளில் கரோனா வைரஸின் பன்முக பாதிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி கரோானா பாதிப்பிலிருந்து மீள்வது ஆகியவை குறித்து ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவல் காரணாமாக தற்போது இருக்கும் பாதிப்பின் அடிப்படையில், 2030-ம் ஆண்டுக்குள் உலகளவில் கூடுதலாக 20.70 கோடி மக்கள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். இதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் உலகளவில் மோசமான வறுமைக்குள் சிக்கியோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும்.
சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) கணக்கின்படி கரோனா வைரஸ் பரவலுக்கு முன் உலகளவில் 4.40 கோடிக்கும் அதிகமான மக்கள் மோசமான வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று மதிப்பிட்டிருந்தது.
ஆனால், கரோனாவைரஸ் பாதிப்புக்குப்பின் கூடுதலாக உலகளவில் 20.70 கோடி மக்கள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். அதிலும் பெண்கள் வறுமையில் வாழும் எண்ணிக்கை 10.20 கோடியாக அதிகரிக்கும்.
கரோனாவில் உண்டான பொருளாதார பிரச்சினைகளில் 80 சதவீதம் குறிப்பாக உற்பத்தி பாதிப்பு 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பிருந்த நிலையை எட்டுவதை தடுக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை முன்வைத்த முதலீடுகள், சமூக பாதுகாப்புத் திட்டம், நலத்திட்டங்கள், நிர்வாகம், டிஜிட்டல்மயமாக்கல், பசுமைப்பொருளாதாரம் போன்றவற்றாலும் மக்கள் மோசமான வறுமைக்குள் செல்வதைத் தடுக்க முடியாது.
ஆனால், இப்போதுள்ள கரோனா பாதிப்பை கணக்கில் எடுத்து, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும்போது, 14.6 கோடி மக்களை மோசமான வறுமையிலிருந்து மீட்டு, பாலின வறுமைக்கான இடைவெளியையும் குறைக்க முடியும். பெண்கள் வறுமையில் வீழ்வதை 7.40 கோடியாகக் குறைக்க முடியும்.
இவ்வாறு அந்த ஆய்வி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா மேம்பாட்டுத் திட்ட நிர்வாகி அசிம் ஸ்டெய்னர் கூறுகையில் “ வறுமை குறித்த இந்த புதிய ஆராய்ச்சியின் மூலம் உலகத் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகை மாறுபட்ட திசைகளில் கொண்டு செல்ல முடியும். அடுத்த 10ஆண்டுகளில் முதலீடு செய்ய நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு கரோனாவிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், வளர்ச்சிக்கான பாதையை மறுசீரமைக்கும், இந்த பூமி பசுமையான திர்காலத்தை நோக்கி நியாயமாகச் செல்ல வழிகாட்டும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT