Published : 05 Dec 2020 03:15 AM
Last Updated : 05 Dec 2020 03:15 AM

2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதாஞ்சலி தேர்வு

2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாக இந்திய அமெரிக்கரான 15 வயது கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ். இவர், 'கைன்ட்லி' என்ற, 'செல்போன்' செயலியை உருவாக்கினார். இது, 'ஆன்லைன்' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலி இயங்குகிறது

மேலும், டெத்திஸ் என்ற பெயரில் இவர் உருவாக்கிய கருவியின் மூலம் நீரில் கலந்துள்ள மாசு தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியும். போதைப் பொருளுக்கு அடிமையாவதில் இருந்து மீள்வது உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்கா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கீதாஞ்சலி ராவ்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ‘டைம்’ இதழ் நடத்திய போட்டியில் 5 ஆயிரம் போட்டியாளர்களுக்கு இடையே கீதாஞ்சலி ராவ் 2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து கீதாஞ்சலி ராவ் கூறியதாவது:

கிரகித்துக் கொள்ளுங்கள், அதை உங்கள் திறமையால் அலசுங்கள், ஆய்வு செய்யுங்கள், அதன்மீது கட்டமைப்பை உருவாக்குங்கள், தொடர்பு கொள்ளுங்கள் என்ற 5 செயல்பாடுகளை பின்பற்றி வருகிறேன். நான் சில கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளேன். என்னால் அதை உருவாக்கும் போது யார் வேண்டுமானாலும் அதைச் செய்ய முடியும்.

உலகில் எத்தனையோ பிரச்சினைகள் தற்போது உருவாகியுள்ளன. அவை எங்கள் தலைமுறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நம்மால் உருவாகாத சில பிரச்சினைகள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அதை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். பருவநிலை மாற்றம், சைபர் புல்லியிங் எனப்படும் ஆன்-லைன் சீண்டல்கள் போன்ற பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும். இவ்வாறு கீதாஞ்சலி ராவ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x