Published : 04 Dec 2020 02:09 PM
Last Updated : 04 Dec 2020 02:09 PM

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 125 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும்: மாடர்னா நிறுவனம் தகவல்

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 100 மில்லியன் முதல் 125 மில்லியன் வரை மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாடர்னா மருத்துவ நிறுவனம் கூறும்போது, ''மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகள் சுமார் 100 மில்லியன் வரை அமெரிக்காவுக்கு வழங்கப்படும். 25 மில்லியன் பிற நாடுகளுக்கு வழங்கப்படும்.

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 100 மில்லியன் முதல் 125 மில்லியன் வரை மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றி பெற்று தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளன. ஆரம்பக் கட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x