Published : 03 Dec 2020 08:43 PM
Last Updated : 03 Dec 2020 08:43 PM

கரோனா தடுப்பு மருந்து குறித்த தகவல்கள் தனித்துவமாக உள்ளது: உலக சுகாதார அமைப்பு

கரோனா தடுப்பு மருந்துகள் குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் ஹன்ஸ் கூறும்போது, “ கரோனா தடுப்பு மருந்து குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. யாருக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றியை எட்டியுள்ளன.

உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x