Published : 03 Dec 2020 02:01 PM
Last Updated : 03 Dec 2020 02:01 PM

பிப்ரவரிக்குள் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா

அடுத்த வருடம் பிப்ரவரி மாத இறுதிக்குள் அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கரோனா தடுப்பு சுமார் 10 கோடி பேருக்குச் செலுத்தப்படும். முதலில் முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிசம்பர் மாதத்தில் 2 கோடி பேருக்கும் ஜனவரியில் 3 கோடி பேருக்கும், பிப்ரவரி இறுதிக்குள் 5 கோடி பேருக்கும் கரோனா தடுப்பு மருந்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றியை எட்டியுள்ளன.

உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x