Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட ஹெச் 1-பி விசா கட்டுப்பாடு நீக்கம்: அமெரிக்க பெடரல் நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக கொண்டு வரப்பட்ட குடியேற்ற விசா கட்டுப்பாடுகளை (ஹெச்1பி) நீதிமன்றம் நீக்கியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம்கொண்டு வந்த விசா கட்டுப்பாடுகள், திறன்மிகு பணியாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்று பெடரல் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதமும் அதிகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவானது கரோனா வைரஸ் பாதிப்பால் வேலையிழந்த அமெரிக்கர் களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக பிறப்பிக்கப்படுவதாக, அதாவது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணி புரிவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் வேலை இழந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பித்து அனுமதி மறுக்கப்பட்டவர்களில் அடங்குவர் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியா நீதிமன்ற நீதிபதி ஜெப்ரி ஒயிட் இந்த வழக்கை விசாரித்து, ‘‘இதில் போதிய வெளிப்படைத் தன்மையை அரசுபின்பற்றவில்லை. கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டு அக்டோபர் மாதத்தில் அமல்படுத்தப்பட்டது. அதற்கு சில மாதங்கள் முன்பாகவே இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரப்போவதான செய்திகளை அதிபர் மாளிகை உலவவிட்டிருந்தது’’ என்று நீதிபதி குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 85 ஆயிரம் பேருக்கு 3 ஆண்டுகளுக்கு ஹெச்1பி விசாவை ஆண்டுதோறும் அமெரிக்கா வழங்குகிறது. இது புதுப்பிக்கத்தக்கது. இந்தியா, சீனாவைச் சேர்ந்த 6லட்சம் பேர் ஹெச்1பி விசாவில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிகின்றனர். விசா கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பை அதிபர்ட்ரம்ப் தேர்தலுக்கு ஒரு வாரம்முன்பாக வெளியிட்டார். அதற்குமுன்பாக ஜூன் மாதத்தில்தான் ஹெச்1பி விசா இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தப்படும் என்றஅறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x