Published : 02 Dec 2020 07:55 PM
Last Updated : 02 Dec 2020 07:55 PM

அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு பைடன் புதிய நிபந்தனை?

ஈரான் உடனான உறவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள அதிபராக தேந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தம் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டுமெனில் அமெரிக்காவின் புதிய நிபந்தைகளுக்கு ஈரான் சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளார். இது இரு நாட்டு உறவில் முக்கிய பங்கை ஆற்ற உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.

மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொன்றார். இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.

முன்னதாக, சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்தது. தற்போது, ஈரானுடனான அமெரிக்காவின் உறவைச் சரிசெய்வது ஜோ பைடனுக்கு எளிதானது என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x