

இந்த ஆண்டில் கரோனா வைரஸைவிட ஜப்பான் தற்கொலைகளுக்கு அதிக உயிர்களைப் பலி கொடுத்துள்ளதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒருவருடமாக கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரச் சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கரோனா வைரஸுக்கு மத்தியில் உலக நாடுகளுக்கு ஜப்பான் சமீபத்தில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. இந்த ஆண்டில் கரோனா வைரஸைவிட ஜப்பான் தற்கொலைகளுக்கு அதிக உயிர்களைப் பலி கொடுத்துள்ளது என்பதுதான் அந்தச் செய்தி.
அதுவும் குறிப்பாக ஜப்பானில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஜப்பானில் செயல்படும் மனநல பாதுகாப்பு தன்னார்வ அமைப்பின் தலைவரான ஒசாரா கூறும்போது, “ கடந்த ஜூலை மாதத்திலிருந்து எங்களுக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தன. பலரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக எங்களைத் தொடர்பு கொண்டனர்.
அதுவும் குறிப்பாக இளைஞர்கள். கரோனா காலத்தில் பலரது மனஅமைதியின் குறைந்துள்ளது. ஜப்பானில் கரோனாவுக்கு முன்னதாகவே தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துத்தான் வந்தது. கரோனா காலத்தில் இன்னும் அதிகரித்து உள்ளது “ என்று தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் அக்டோபர் மாதம் மட்டும் 2,158 தற்கொலை செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சமீப காலமாக பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்து வருவதால் மக்களின் மன நலத்தை காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பான் மட்டுமல்லாது தென்கொரியாவிலும் இவ்வாண்டு தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.