Published : 01 Dec 2020 06:40 PM
Last Updated : 01 Dec 2020 06:40 PM

பாகிஸ்தானில் கரோனா தொற்று 4 லட்சத்தைக் கடந்தது: இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,458 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,74,350 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 1,19,578 பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 17,406 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தானில் ஜூலை மாதத்திற்குப் பிறகு நவம்பர் மாதத்தில் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x