Published : 27 Nov 2020 03:32 PM
Last Updated : 27 Nov 2020 03:32 PM

இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி: ரஷ்யா

இந்தியாவின் ஹெட்டிரோ மருந்து நிறுவனத்துடன் இணைந்து அடுத்த வருடத்தில் 10 கோடி ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் நேரசி முதலீட்டு நிறுவனம் தரப்பில், “ உலகளவில் முதலில் பதிவுச் செய்யப்பட்ட கரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் 5 மருந்தை வருடத்திற்கு 10 கோடி டோசஸ் அளவில் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஹெட்டிரோ மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x