Published : 27 Nov 2020 01:05 PM
Last Updated : 27 Nov 2020 01:05 PM

பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

பிரேசிலில் இம்மாதத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 37,614 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,04,220 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று மட்டும் 691 பேர் கரோனாவுக்கு பலியாகினர். நாட்டில் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,71,460 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது பிரேசில் உள்ளது” என்று தெரிவித்தனர்.

பிரேசிலின் முக்கிய நகரங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் விரைவில் நிரம்பலாம் என்று தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x